ஈரானில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சர்ச்சைக்குரிய வான்வெளியை தவிர்க்க இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் இன்று முடிவெடுத்துள்ளது.
தென்கிழக்கில் ஓமன் குடாவையும், தென்மேற்கில் பாரசீகக் குடாவையும் கொண்டு அமைந்துள்ள ஒரு குறுகலான கடற்பரப்பின் அருகாமையில் இந்த ஹோர்மஸ்கான் பிராந்தியம் அமைந்துள்ளது. இதன் வடக்கில் ஈரானும், தெற்கில் ஐக்கிய அரபு அமீரகமும், ஓமன் நாட்டின் ஒரு பகுதியான முசாந்தமும் அமைந்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பகுதிக்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.
அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்த பின்னர் இந்த பகுதிக்கு உட்பட்ட வான்வெளி வழியாக வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்படவில்லை. குறிப்பாக, அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள் மாற்றுப்பாதை வழியாகத்தான் வளைகுடா நாடுகளுக்கு சென்று வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக இந்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்துடன், இந்தியாவில் உள்ள விமானச் சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் இன்று ஆலோசனை நடத்தினர். அதில், பயணிகளின் பாதுகாப்பு கருதி ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளை தவிர்த்துவிட்டு மாற்றுப் பாதையில் இந்திய விமானங்கள் இயக்க முடிவெடுத்துள்ளனர்.